வாகன இறக்குமதியைத் தவிர தற்போது விதிக்கப்பட்டுள்ள அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளையும் அடுத்த மாதமளவில் நீக்கவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நாடு முகம் கொடுத்த பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இறக்குமதி கட்டுப்பாட்டை தற்காலிகமாக விதித்து, நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு அரசு செயற்பட்டதையும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நினைவு கூர்ந்தார். தற்போது இறக்குமதி கட்டுப்பாடு எச்.எஸ். கோட் 600 பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதில் எச்.எஸ்.கோட் 270 க்கும் அதிகமான அளவில் வாகன இறக்குமதி தொடர்பாகவே விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் முதல் இந்த கட்டுப்பாட்டை தவிர ஏனையவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் புதிய வரிக் கொள்கை, சர்வதேச நாணய நிதி வசதியை பெற்றுக் கொள்ளும் திட்டம், அரச வருமானத்தை அதிகரிப்பது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அறிஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் மாநாடொன்றில் உரையாற்றும் போதே, இக்கருத்தை அவர் தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் அண்மையில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஜனாதிபதி செயலகம், இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (அரச வருமானம்) எம். ஜே.குணசிறி, வட மத்திய மாகாண தலைமை செயலாளர் சந்திரசிறி பண்டார ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.