பதினைந்து ஆண்டுகளின் பின் நேற்று (22) நாடு திரும்பிய தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் சினவாத்ரா கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் குறுகிய கால சிறை தண்டனை ஒன்றுக்கான உடன்படிக்கை ஒன்றை எட்டிய பின்னரே அவர் நாடு திரும்பி இருப்பதாக நம்பப்படுகிறது.
தக்சினின் பியு தாய் கட்சியைச் சேர்ந்தவர் முன்னணி வேட்பாளராக இருக்கும் தாய்லாந்தின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் வேளையிலேயே தக்சின் தனியார் விமானத்தில் தாய்லாந்தை அடைந்துள்ளார்.
குற்றவியல் குற்றச்சாட்டில் தக்சினுக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டபோதும் அது அரசியல் நோக்கம் கொண்டது என்று அவர் கூறி வந்தார்.
74 வயதான தக்சின் 2006 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்டார். எனினும் அவர் தொடர்ந்து நாட்டின் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அரச பொது மன்னிப்பை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறையில் இருந்து அவருக்கு உடன் இந்த மனுவை சமர்ப்பிக்க முடியும் என்று சிறை நிர்வாகம் நேற்று தெரிவித்தது. இந்த நடைமுறைக்கு ஓரிரு மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.