மட்டக்களப்பு வெல்லாவெளியில் இரண்டு நாட்களில் இரு வீடுகளை உடைத்து ரூபா 8 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் இரண்டு நாட்களில் பூட்டியிருந்த இரு வீடுகளை திருடர்கள் உடைத்து அங்கிருந்து 8 இலட்சம் ரூபா பெறுமதியான 5 பவுண் தங்க நகைகளையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை (07) வெல்லாவெளி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சப் இன்பெக்டர் எம்.ஜி.பி.எம்.எம். ஜெசூலி முகமட் தெரிவித்தார்.
குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை பிரதேசத்தில் சம்பவ தினமான நேற்று முன்தினம் புதன்கிழமை (05) குறித்த வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவரும், அவரது 3 வயது குழந்தையும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் ஒருவரின் மரணவீட்டிற்கு சென்று திரும்பிய நிலையில் வீட்டின் கூரையை கழற்றி உள்நுழைந்த திருடன் அங்கிருந்து கைசெயின் ஒன்றையும், மோதிரம் மூன்றையும், கையடக்க தொலைபேசி ஒன்றையும் திருடிச் சென்றுள்ளான்.
இதேவேளை, வெல்லாவெளி கமலநல சேவைகள் திணைக்களத்துக்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றின் உரிமையானரான பெண் ஒருவர் சம்பவ தினமான நேற்று (06) காலை வேலைக்கு சென்று மதிய உணவிற்காக ஒரு மணியளவில் வீடு தரும்பிய நிலையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து அங்கிருந்த 4 பவுண் கொண்ட நெக்லஸ் தங்க ஆபரணத்தை திருடன் திருடிச் சென்றுள்ளான் எனவும் இச்சம்பவங்கள் தொடர்பாக தடவியல் பொலிஸ் பிரிவு வரவழைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க.விஜயரெத்தினம்)