மகளை பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற ஆசிரியர் விபத்தில் பலி

- 7 வயது மகள் லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதி
- சாரதி மற்றும் பஸ் மீது பொதுமக்கள் தாக்குதல்

மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் மோதிய விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று (22) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது மகளை கொலன்னாவையில் இருந்து குப்பியவத்தை நோக்கி பாடசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது கொலன்னாவை ரஜமகா விகாரைக்கு அருகில் பயணித்த பஸ் திடீரென இடப்புறம் திரும்பியதில் மோட்டார் சைக்கிள் அதில் சிக்கி சுமார்  50 மீற்றர் முன்னோக்கி சென்று விபத்திற்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் ஏழு வயதுடைய பாடசாலை மாணவி படுகாயமடைந்து கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் மெகொட கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தையடுத்து அங்கிருந்த பிரதேசவாசிகள் பஸ் சாரதியையும் பஸ்ஸையும் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியதுடன் தாக்குதலுக்கு உள்ளான சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் பஸ் பாதுகாப்பு கருதி முல்லேரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...