"கோவில் உடைக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளது" செய்தியில் உண்மையில்லை

- வட மாகாண ஆளுநர், UDA பணிப்பாளர், தெல்லிப்பளை பி.ச. செயலர் உள்ளிட்டோர் மறுப்பு

கோவில் உடைக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சில ஊடகங்களில்   வெளியிடப்பட்ட செய்தியை வடமாகாண ஆளுநர், வடபகுதிக்குப் பொறுப்பான நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் படைத்தரப்பு என்பன மறுத்துள்ளன.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க   இதனை மேற்கொண்டதாக தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இந்த செய்தி  ஊடகங்களில்  வெளியாகியுள்ளன.

கோவில் உடைக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும்   செய்தியின் உண்மைத் தன்மை  தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் படையினரிடம்  வினவியதில்  குறித்த செய்தி  உண்மைக்கு புறம்பானது என்பது தெளிவாயுள்ளது.

கோவில் இருந்த இடத்தில் ஜனாதிபதி மாளிகை கட்டப்படவில்லை எனவும் அதற்கு அருகில் தனியாரிடம் சுவீகரிக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட  காணியிலே மாளிகை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், 8 வருடங்களுக்கு முன்னரே மாளிகை நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டை மறுத்த வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கோவில் உடைக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எந் உண்மையும் இல்லை என்றும் திரிபுபடுத்தப்பட்டு தவறான கருத்தை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு செய்தி பரப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

2013 ஆம் ஆண்டிலே இங்கு ஜனாதிபதி மாளிகை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு ஆட்சி மாற்றத்துடன் 2015 இல் இந்த பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக வடக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் திசானாயக்க  தெரிவித்தார். கடற்படையின் கீழே இந்த மாளிகை மற்றும் கோவில்  உள்ள பிரதேசம்  இருந்ததோடு 2022 இல்  உத்தியோகபூர்வமாக இந்தப் பிரதேசம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.  29 ஏக்கர் முழு நிலப்பகுதியில் ஒரு பகுதியிலே மாளிகை அமைந்துள்ளதோடு   மாளிகை நிர்மாணிக்கப்பட்ட பின்னர் கடற்படை அங்கு பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். பத்திரிகை செய்தி தவறானது என்றும் இது தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் கோவில் அழிக்கப்பட்டு மாளிகை கட்டப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தி  தொடர்பில் கருத்துத் தெரிவித்த தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவஶ்ரீ, சிவன் கோவில் ஒன்று  அங்கிருந்ததாகவும் அண்மையில் கிருஷ்ணன் கோவில்  நிர்வாகிகள் அந்த கோவில் இருந்த பகுதிக்கு கடற்படையினருடன் சென்றதாகவும் தெரிவித்தார். சிவன் கோவில் இருந்த இடத்தில் அன்றி அதற்கு அருகிலே ஜனாதிபதி மாளிகை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் 1990 வரை சிவன் கோவிலில் பூஜை இடம்பெற்றதாகவும் எக்காலப்பகுதியில் கோவில் உடைந்தது என்ற தகவல்  தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.தனியாருக்கு சொந்தமான காணி சுவீகரிக்கப்பட்டு அந்த இடத்திலே ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளதாகவும் கோவில் காணி அதற்கு பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் கோவிலின்  பல பகுதிகள் சேதமடைந்து கோவில் இருந்ததற்கான அடையாளங்கள்  அங்கிருப்பதாக  கிருஷ்ணன் கோவில் பரிபாலன சபை உறுப்பினர்கள் தெரிவித்தார்கள். கிருஷ்ணன் கோவிலின் சில பகுதிகளும் சேதமாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர் மாளிகை உட்பட சுற்றியுள்ள  முழுமையாக காணி நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழே கொண்டுவரப்பட்டுள்ளது  என்றும் குறிப்பிட்டார்.

வடபகுதிக்குப் பொறுப்பான கடற்படை கட்டளைத்தளபதி  அத்மிரல் அருண தென்னகோன் இது தொடர்பில் தெளிவுபடுத்துகையில், மாளிகையின் சொத்துக்களின் பாதுகாப்பிற்காக கடற்படை அங்கு இருப்பதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழே இந்த பிரதேசம் காணப்படுவதாகவும் தெரிவித்தார். கடற்படை பிரதான தளமும் இதற்கு அருகிலே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ் இராணுவக்கட்டளைத் தளபதி மேஜர்  ஜெனரல் சொர்ண போதொட்ட குறிப்பிடுகையில், குறித்த பிரதேசத்தில் ஜனாதிபதி மாளிகைக்கான தேவையொன்று இல்லை என்பதை  தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அண்மையில் மேற்கொண்ட யாழ்ப்பாண  விஜயத்தின்போது குறிப்பிட்டிருந்தார். இந்த மாளிகை  சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறந்த தரத்திலான ஹோட்டல் ஒன்றாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர்  யோசனை   முன்வைத்திருந்தார்.  யாழ்ப்பாணம் முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் இந்த பிரதேசம் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.இராணுவம் அங்கு எந்த வித நிர்மாணங்களை மேற்கொள்ளவோ அழிக்கவோ இல்லை என்றும் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...