யானைகளை பதிவு செய்யும் 'யானை புத்தகம்' எனும் ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்ட குறித்த மனு இன்று (02) மேன்முறையீட்டு நீதியரசர்களான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
யானைகளை பதிவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வௌியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், யானைகளின் பதிவு முறையை சரிபார்க்க யானை புத்தகத்தை சரிபார்க்க வேண்டியது அவசியமென முடிவு செய்தது.
இதன்படி, தற்போது கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குப் பொருளாக தாக்கல் செய்யப்பட்டுள்ள யானை புத்தகத்தை இன்று முதல் 10 நாட்களுக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற பதிவாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Add new comment