- தாக்குதலை தடுக்க தவறியதால் சந்தேகநபராக பெயரிடுமாறு வழக்கு
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.
குறித்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதியை சந்தேகநபராக பெயரிட்டுள்ள நீதிமன்றம், அவரை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் மைத்திரிபால சிறிசேனவை சந்தேகநபராக பெயரிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இவ்வாறு அழைப்பாணை விடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான, நீதிக்கான தேசிய கத்தோலிக்க குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அருட் தந்தை சிறில் காமினி பெனாண்டோவினால் குறித்த தனிப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தாக்குதல்களைத் தடுக்கத் தவறியுள்ளார் என மனுதாரர் தமது மனுவில் சுட்டிகாட்டியுள்ளார்.
Add new comment