- 8 இடங்களில் 9 தற்கொலை தாக்குதல்கள்
- பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி
உயிர்த்த ஞாயிறு தினமான, கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 3 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
குறித்த தினத்தில், கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் ஆலயம், நீர்கொழும்பு புனித செபஸ்தியன் ஆலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய மூன்று தேவாலயங்கள், கொழும்பின் பிரபல ஹோட்டல்களான ஷங்ரி லா, சின்னமன் கிராண்ட், கிங்ஸ்பெரி மற்றும் தெஹிவளையிலுள்ள ட்ரொபிகல் இன் விடுதி உள்ளிட்ட நான்கு ஹோட்டல்கள் மற்றும் தெமட்டகொடையிலுள்ள வீடொன்றில் மேற்கொண்ட சோதனையின்போதான தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், 9 தற்கொலை தாக்குதல்தாரிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இத்தாக்குதல்களில் 39 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட, பொதுமக்கள், பாதுகாப்புப் பிரிவினர் உள்ளடங்கலாக 269 பேர் உயிரிழந்ததுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
குறித்த தாக்குதல் இடம்பெற்று 3 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்றையதினம் (21) பாராளுமன்றத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்த வேண்டுகோளுக்கமைய இவ்வாறு மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய அமர்வில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு ஆடை அணிந்து வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, இன்றையதினம் (21) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் தலைமையில் விசேட சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, நாடு முழுவதுமுள்ள ஆலயங்களிலும் அதனுடன் இணைந்த அஞ்சலி நிகழ்வுகள், அனுஷ்டானங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
தற்கொலை குண்டு தாக்குதல்தாரிகளின் விபரங்கள்:
ஷங்ரி லா ஹோட்டல், கொழும்பு (முதலாவது தாக்குதல் தாரி)
1. மொஹம்மட் ஹாசிம் மொஹம்மட் ஸஹ்ரான்
குடைக்காரர் வீதி, முஹிதீன் பள்ளி வீதி, காத்தான்குடி 03
இவரது தந்தை மற்றும் ரில்வான், செய்னி ஆகிய இரு சகோதர்கள் உள்ளிட்ட மூவரும் சாய்ந்தமருது சம்பவத்தில் வெடிக்கச் செய்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது சாரதியான கபூர் என அழைக்கப்படும் ஆதம்லெப்பை CID யினரால் கைது செய்யப்பட்டதோடு, அவர் ஸஹ்ரானின் சகோதரரான செய்னியின் மனைவியின் தந்தை ஆவார்.
ஷங்ரி லா ஹோட்டல், கொழும்பு (இரண்டாவது தாக்குதல் தாரி)
2. மொஹம்மட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்
மஹவில கார்டன், பேஸ்லைன் வீதி, தெமட்டகொடை
இவரது தந்தையான் மொஹம்மட் யூசுப் மொஹம்மட் இப்ராஹிம் மற்றும் தாக்குதல்தாரியின் இரு சகோதரிகள் CID யினரால் கைது செய்யப்பட்டனர்.
சின்னமன் கிராண்ட், கொழும்பு
3. மொஹம்மட் இப்ராஹிம் இன்ஷாப் அஹமட்
மஹவில கார்டன், பேஸ்லைன் வீதி, தெமட்டகொடை
வெல்லம்பிட்டி பிரதேசத்திலுள்ள செப்பு தொழிற்சாலை உரிமையாளர்.
ஷங்ரி லா ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்ட மொஹம்மட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்டின் சகோதரர்.
இவரது மனைவி CID யினரால் கைது செய்யப்பட்டார்.
கிங்ஸ்பெரி ஹோட்டல், கொழும்பு
4. மொஹம்மட் அசாம் மொஹம்மட் முபாரக்
புதிய யோன் வீதி, கொழும்பு 12 மற்றும் பண்டாரநாயக்க வீதி, கொழும்பு 12
(இரு முகவரிகள்)
இவரது மனைவி CID இனால் கைது செய்யப்பட்டார்.
கட்டுவாபிட்டி புனித செபஸ்தியன் ஆலயம்
5. அச்சி முஹம்மது மொஹம்மட் ஹஸ்துன்
AFC வீதி, வாழைச்சேனை
இவரது மனைவியான சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கொட்டாஞ்சேனை, புனித அந்தோனியார் ஆலயம்
6. அலாவுதீன் அஹமட் முவாத்
சென்றல் வீதி, மட்டக்குளி
இவரது சகோதரர் CID இனால் கைது செய்யப்பட்டார்.
சீயோன் தேவாலயம், மட்டக்களப்பு
7. மொஹம்மட் நசார் மொஹம்மட் அசாத்
மையவாடி வீதி, புதிய காத்தான்குடி
ட்ரொபிகல் இன், தெஹிவளை
8. அப்துல் லத்தீப் ஜமீல் மொஹம்மட்
வெலம்பட, கம்பளை
லன்சியாவத்தை, வெல்லம்பிட்டி
(இரு முகவரிகள்)
இவரது மனைவி மற்றும் மனைவியின் சகோதரர்கள் இருவர் உள்ளிட்ட சிலர் TID யினரால் கைது செய்யப்பட்டனர்.
மஹவில கார்டன், தெமட்டகொடை (வெடிக்க வைப்பு)
9. பாத்திமா இல்ஹாம்
மஹவில கார்டன், பேஸ்லைன் வீதி, தெமட்டகொடை
ஷ்ங்ரி லா ஹோட்டல் தாக்குதல்தாரியான இல்ஹாம் அஹமட்டின் மனைவி
இவர்கள் அனைவரும், பல்வேறு நபர்களின் வாக்குமூலம் மற்றும் விசாரணைகளின் மூலம் கிடைக்கப்பெற்ற பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டதாக, அப்போதைய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.
Add new comment