2021 பட்ஜட் ஒக்டோபர் இரண்டாம் வாரத்தில் பாராளுமன்றில்

2021 பட்ஜட் ஒக்டோபர் இரண்டாம் வாரத்தில்-2021 Appropriation Bill to Be Tabled in October

100,000 கி.மி. வீதி புனரமைப்பு, அரச பணிகள் டிஜிற்றல் மயப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்களுக்கு முன்னுரிமை

2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலம் எதிர்வரும் ஒக்டோபர் 02 ஆம் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்று (16) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கொள்கை கட்டமைப்பை நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.

அதற்கமைய, பின்வரும் விடயங்களுக்கு இதில் முக்கியத்துவம் வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • அனைவருக்கும் குடி நீரை வழங்குதல், முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் 100,000 கிலோ மீற்றர் வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், நீர்வள மற்றும் நீர்ப்பாசன துறைகளுக்காக முக்கியத்துவம் வழங்குதல்.
  • அரசாங்க பணிகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குதல்.
  • 'சுபீட்சத்தின் நோக்கு' எனும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கு அமைய, எதிர்பார்க்கப்பட்டுள்ள பெறுபேறுகளை அடைவதற்கு தேவையான வளங்களை ஒதுக்கீடு செய்தல்.
  • அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கு விடயதானங்கள் வழங்கப்பட்டமைக்கு அமைவாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட வகையில் சம்பந்தப்பட்ட இலக்கை நிறைவேற்றுவதற்கு தேவையான வளங்களை ஒதுக்கீடு செய்தல்.
  • அரசாங்கத்தின் வருமானம் 2021 ஆம் ஆண்டிற்குள் தேசிய உற்பத்தியில் 10.2 சதவீதமாக அமையும் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த நிலைமையின் கீழ் செலவை முகாமைத்துவம் செய்யும் நடைமுறையை முன்னெடுத்து வர்த்தக நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு தேவையான சூழ்நிலையை ஏற்படுத்தி அரச முதலீட்டு வேலைத்திட்டத்திற்காக வளங்களை ஒதுக்கீடு செய்தல்.
  • குறைந்த வளங்களை பயன்படுத்தி மிகவும் பயனுள்ள பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் தற்பொழுதுள்ள நடைமுறைகளை மதிப்பீடு செய்து பரந்துபட்;ட நடைமுறையில் ஈடுபடுவது தொடர்பில் கவனம் செலுத்துதல்.

மேலே குறிப்பிடப்பட்ட கொள்கையின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...