மன்னார், மடுமாதா திருத்தலத்தில் 2020ஆம் ஆண்டு ஆடி 02ஆம் திகதி (02.07.2020) இடம்பெறவுள்ள ஆடி மாத திருவிழாவுக்கான இரண்டாவது திட்டமிடல் கூட்டம், மடுமாதா திருத்தலத்தின் புனித ஜோசப்வாஸ் ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று (25) இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில், திருவிழாவுக்கான திட்டமிடல் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை , அரச அனுசரணையுடன் ஆண்டு தோறும் நடைபெறும் மன்னார் மறை மாவட்டத்திலுள்ள யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு மாதாவின் ஆடி மாத பெருவிழாவில் ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்ள முடியும் என்றார்.
வழமை போல் திருவிழாத் திருப்பலி ஆடி மாதம் இரண்டாம் திகதி காலை 6.15 மணிக்கு நடைபெறும்.
இங்கு திருவிழா நாள் அன்று நடைபெறும் திருவிழா திருப்பலிக்கு பக்தர்கள் வந்து செல்லலாம். ஆனால், கொவிட்-19 காரணமாக ஒரு திருப்பலியில் ஆயிரம் பேர் மாத்திரம் கலந்துகொள்ள முடியும்.
ஆயிரம் பேருக்கு மேல், திருப்பலியில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது. திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து காலை 8.30 மணி மற்றும் 10.30 ஆகிய இரு நேரங்களில் திருப்பலிகள் நடத்தப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆகவே, குறித்த திருப்பலிகளில் பக்தர்கள் வந்து கலந்துகொள்ள முடியும்.
பெருவிழா நாளில் மருதமடு மாதாவின் ஆலயம் வரும் பக்தர்கள், மக்களுக்கு அரசு தெரிவித்திருக்கும் அறிவுரைகளுக்கு அமைவாக சுகாதாரத்தை கடைப்பிடித்தவர்களாக, முகக் கவசம் அணிந்தவர்களாக, கைகளை நன்கு கழுவியவர்களாக, சமூக இடைவெளியை பின்பற்றியவர்களாக இவ்விழாவில் கலந்துகொள்ள முடியும்.
திருவிழா நாளான ஆடி இரண்டாம் திகதி அன்று காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
திருப்பலியில் கலந்துகொள்ள முடியாத பக்தர்களின் நலன் கருதி, அரச ஊடகமான ரூபாவாஹினி தொலைக்காட்சியூடாக ஒளிபரப்பப்படும்போது பக்தர்கள் அதன் மூலம் அன்னையின் ஆசீரை பெற்றுக்கொள்ளலாம் என, மன்னார் மறைமாவட்ட ஆயர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல. இம்மானுவேல் ஆண்டகை, மடு மாதா திருத்தலப் பரிபாலகர் அருட்பணி ச.ஜொ. பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறை மாவட்டக் குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார், கிறிஸ்தவ சமய பணிகள் திணைக்களத்தின் இயக்குனர் திருமதி சத்துரி பின்ரோ, மாந்தை பிரதேச சபை தவிசாளர் ஆசீர்வாதம் சந்தியோகு, மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதாரத் திணைக்கள உயர் பொறுப்பு நிலைப் பணியாளர்கள், மடு பிரதேச செயலர் செல்வி வினிஜித்தா கௌசிகன் , மடு பிரதேச செயலக பணியாளர்கள், முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, அரச தனியார் போக்குவரத்துப் பிரிவினர் மற்றும் பல்துறைசார் பொறுப்பு நிலைப் பணியார்களும் கலந்துகொண்டு திருவிழாவுக்கான தங்கள் துறைசார் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தனர்.
(மன்னார் குறூப் நிருபர் – எஸ். றொசேரியன் லெம்பேட், தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ)
Add new comment