ஊரடங்கை மீறி கைதானோர் 59,035ஆக உயர்வு

ஊரடங்கை மீறிய 15,695 பேர் மீது வழக்கு, 5,660 பேருக்கு எதிராக அபராதம்

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 59,035 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 16,436 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு, ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 15,695 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, 5,660 பேருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல், இன்று (18) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், நேற்று  (17)  காலை 6.00 மணி முதல், இன்று (18) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 2,709 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 946  வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...