ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் 55,706 பேர் கைது

கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இன்று (16) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 55,706 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, இக்காலப்பகுதியில் 15,216 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, அக்காலப்பகுதியினுள் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 12,482  மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதோடு, 4,808 பேருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இதற்கமைய, நேற்று (15) காலை 6.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 559 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இக்காலப்பகுதியில் 205 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.


Add new comment

Or log in with...