ஊழல், மோசடிகளுக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது
இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னரான 70 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் ஊழல் மோசடிகளுக்கு எதிராக மேற்கொள்ள முடியாது போன பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டு, ஊழல், மோசடிகளற்ற தூய்மையான ஆட்சியொன்றை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு நல்லாட்சி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (05) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவை சுயாதீன ஆணைக்குழுவாக பலப்படுத்துதல் மற்றும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்டத்தை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சுயாதீன கணக்காய்வு ஆணைக்குழுவை அமைக்கக் கிடைத்தமை இதன் முக்கிய வெற்றியாகும் என்றும் குறிப்பிட்டார்.
40, 50 வருட காலமாக பேச்சளவில் மட்டுமே இருந்துவரும் கணக்காய்வு சேவையை ஸ்தாபிப்பதை விரைவுபடுத்தவும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
ஊழல், வீண்விரயம் மற்றும் திருட்டுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் இருந்துவரும் காலதாமதம் தொடர்பாக நாட்டு மக்களின் கவலை குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நல்லாட்சி அரசாங்கத்தில் மக்கள் வைத்துள்ள எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நாட்டில் இடம்பெற்றுள்ள பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் கண்டறிவதற்காக தான் நியமித்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்தி தவறிழைத்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இதன்போது மக்களின் சொத்துக்களையும் அரச நிதியையும் துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும் சட்டத்தில் மரண தண்டனையையும் உட்படுத்த வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரச வர்த்தக துறைகளில் எழுச்சியை ஏற்படுத்தும் போது ஊழல் மோசடிகள் இல்லாத வகையில் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஊழல் மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் நிறுவனங்களின் பௌதீக மற்றும் மனித வளங்களை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
கணக்காய்வாளர் நாயகத்தினால் அரச நிறுவனங்கள் தொடர்பாக கணக்காய்வு விசாரணைகளை மேற்கொண்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை பரிசீலனை செய்யும் பாரம்பரிய முறைமைகளைக் கடந்து அரச கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் கண்காணிப்புக்கு உட்படும் அனைத்து அரச நிறுவனங்களினதும் நிதி நிர்வாகம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டிருத்தல் மற்றும் செயலாற்றுகை தொடர்பான தகவல்களை கணனி மயப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் பெற்று அதன் பின்னர் கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தினால் அத்தகவல்களை பகுப்பாய்வும் விசாரணையும் செய்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் பிரகாரம் உயர் செயலாற்றுகையை வெளிப்படுத்தும் நிறுவனங்களை பாராட்டும் வகையில் இரண்டாவது முறையாகவும் இந்த விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2016 நிதி ஆண்டிற்கான முதலாவது பாராளுமன்றத்தின் கணனி மயப்படுத்தப்பட்ட தகவல் முறைமையின் மூலம் நாடெங்கிலும் உள்ள சகல அரசாங்க நிறுவனங்களினதும், அதாவது மத்திய அரசாங்கத்தின் சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள், விசேட செலவுப் பிரிவுகள், மாகாண சபைகள், மாவட்ட செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட 837 நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களை மதிப்பீடு செய்ததன் பின்னர் பல்வேறு பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்பட்ட குறித்த நிதி ஆண்டில் அதிக செயலாற்றுகையை வெளிப்படுத்திய 101 நிறுவனங்களுக்கு இதன்போது விருதுகள் வழங்கப்பட்டன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க, அரச கணக்குகள் பற்றிய பாராளுமன்ற குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண, கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Add new comment