யாழ். முற்றவெளியில் 'எழுக தமிழ்' பேரணி இன்று

 யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

எழுக தமிழ் மக்கள் பேரணி இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோவிலின் முன்றலிலிருந்தும் யாழ் பல்கலைக்கழக முன்றலிலிருந்தும் ஆரம்பமாகி யாழ் முற்றவெளியை சென்றடையும் என எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழு சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

முற்றவெளியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டதில் முதலமைச்சரும்,தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களும் உரையாற்றுவதுடன் முக்கியமான பிரகடனங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் கச்சேரி முன்றல்,கல்வியங்காடு என்ற இடங்கள் மாற்றப்பட்டு நல்லூர் மற்றும் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மாத்திரம் பேரணிகள் புறப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது..

வடமராட்சி,தென்மராட்சி,வலிகாமத்தின் பலபகுதிகள், தீவகத்திலிருந்தும் மக்கள் இலகுவாக இப்பேரணியில் பங்கு கொள்ளும் பொருட்டு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருந்த போதும் தமது சொந்த வாகனங்களில் வரக்கூடியவர்கள் அனைவரும் 9.00 மணிக்கு முன்பாக பேரணி ஆரம்பிக்கும் இடங்களுக்கு வருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரணியை குழப்பும் பொருட்டு ஒரு சில தவறான செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிடப்பட்டுள்ளன. பேரணிக்குத் தேவையான அனைத்துப் பணிகளும் சட்டபூர்வமாக செய்யப்பட்டிருக்;கின்றன என்பதை மக்களுக்கு அறியத்தருவதுடன் யாழ் மாவட்டத்தின் அனைத்து வர்த்தக சங்கங்களும் தமது வியாபார நிலையங்களைப் பூட்டி எழுக தமிழ் பேரணியில் பங்கு கொள்வதாக அறிவித்துள்ளனர்

அத்துடன் யாழ் மாவட்டத்திலுள்ள தொழிற்சங்கங்களும்,சிவில் அமைப்புக்களும்,பொது அமைப்புக்களும்,பல்கலைக்கழக சமூகமும் மற்றும் கற்றல் கற்பித்தல் சமூகங்களும் பேரணியில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள். மேற்குறிப்பிட்ட அனைத்து அமைப்பினரும் எழுக தமிழ் என்ற சொற்பதத்துடன் அவர்களது பதாதைகளுடன் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறும் ழைப்பு விடுக்ப்பட்டுள்ளதாக. சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்ததார்.

வடமாகாணத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சிங்கள முடியேற்றங்கள் மற்றும் பௌத்த சின்னங்கள் அமைத்தல், காணி சுவீகரிப்பு, மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வடமாகாண மக்களினால் முன்னெடுக்கப்படும் இப்பேரணிக்கு, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புக்கள், வைத்தியர்கள், புலம்பெயர் தமிழ் உறவுகள், புலம்பெயர் அமைப்புக்கள், யாழ்.பல்கலைக்கழகம், ஆசிரியர் சங்கங்கள், மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட காணாமல் போனோர்கள் அமைப்புக்கள், அரசியல் கைதிகளின் அமைப்புகள், சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்புக்கள், இந்து கிறிஸ்தவ இஸ்லாம் அமைப்புக்கள் தமது ஆதரவினையும் வழங்குகின்றன.

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பொங்குதமிழ் எழுச்சி பேரணியினை போன்று, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் மீட்டெடுக்கும் வகையில், “எழுக தமிழ்” பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.


Add new comment

Or log in with...