தாய், பச்சிளம் குழந்தை உட்பட மூவர் வெட்டிக் கொலை

 

பெண்ணின் கணவன் சந்தேகத்தில் கைது

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு சடலங்கள் கிணற்றில் வீசியெறியப்பட்டிருப்பதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.  

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காக்காச்சிவெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த பேரின்பம் விஜித்தா (வயது 24), பிரசாந்தன் சஸ்னிகா (வயது 18 மாதங்கள்) மற்றும் கந்தையா பேரின்பம் (வயது 56) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  
இம்மூவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் சனிக்கிழமை நள்ளிரவைத் தாண்டி சற்று நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த நபர் விஜித்தாவையும் அவரது ஒன்றரை வயதுக் குழந்தையையும் வெட்டிக் கொலை செய்து வீட்டுக் கிணற்றில் வீசி எறிந்துள்ளார். 
 
அயல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கொல்லப்பட்டவரான பேரின்பம் தனது மகளின் அவலக் குரல் கேட்டு ஓடிவந்த பொழுது கொலையாளி அவரையும் வெட்டிச் சாய்த்துள்ளார்.
  
வெட்டப்பட்ட விஜித்தாவின் தந்தையான பேரின்பம் காயங்களோடு குற்றுயிராகக் கிடந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் முன்னதாக சேர்ப்பிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிறு காலை மரணமடைந்துள்ளார்.
  
இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த வெல்லாவெளி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்ததோடு, குற்றப்புலனாய்வுப் பிரிவினர், மோப்பநாய் என்பன வரவளைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. 
 
இதன்போது மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணாரெத்தின, களுவாஞ்சிகுடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பெத்ததந்திரி, வெல்லாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பத்குமார் உட்பட பலர் வருகை தந்து விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
  
இவ்விடத்திற்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி யு.எல்.முஹமட் றிஸ்வி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் எச்.எம்.ஏ.தர்மசேன ஆகியோரின் முன்னிலையில் சடலங்கள் இரண்டும் கிணற்றிலிருந்து வெளியேற்றப்பட்டன.

சடலங்களை அவதானித்த நீதிபதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரதபரிசோதனைக்கு அனுப்புமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார் இக்கோரச்சம்பவம் தொடர்பில் உயிரிழந்த விஜிதாவின் கணவரைச் சந்தேகத்தின்போரில் கைது செய்துள்ளதாககவும், இச்சம்பவம் குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்றிருக்கலாமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்முக்கொலை

(பெரியபோரதீவு தினகரன், வெல்லாவெளி தினகரன்,  புதிய காத்தான்குடி தினகரன்  நிருபர்கள் )


Add new comment

Or log in with...