ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கடற்றொழிலாளர்கள் முகங்கொடுத்துவரும் முக்கிய பிரச்சினைகளான எரிபொருள், மீன் இறக்குமதி மற்றும் கடற்றொழில் உபகரணங்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத் தருமெனவும், அதற்கான வாக்குறுதியை ஜனாதிபதி தனக்கு வழங்கியிருப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த 26.01.2024 ஆம் திகதி வெல்லமங்கரவில் இடம்பெற்ற கடற்றொழிலாளர் நலவலுவூட்டல் நிகழ்வில் கடற்றொழிலாளர்களுக்கு முதலுதவி மற்றும் மருத்துவச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறுதெரிவித்தார்.
இந்நிகழ்வில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்ததாவது:
இவ்வருடம் கடற்றொழிலாளர்களின் நலன் கருதிஅரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பாரிய திட்டம் கடற்றொழிலாளர் நலவூட்டல் திட்டமாகும். கடந்த காலங்களில் கடற்றொழிலாளர்கள் கடலில் தொழில் செய்யும் போது, அவர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டால் எவ்வாறு அவர்களுக்கு சிகிச்சை வழங்குவது எனும் பிரச்சினை முக்கிய பிரச்சினையாக இருந்து வந்தது.
அதனால் கடலில் நோய்வாய்ப்படும் மீனவர்கள் பலர் மீன்பிடிப் படகுகளில் மரணமடைந்த சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன. ஒருசில மீனவர்கள் நோய்வாய்ப்படும் போது அவர்கள் தொழில் புரியும் பகுதிகளுக்கு சமீபமாகவுள்ள நாடுகளின் உதவி பெற்றுக் கொள்ளப்பட்டது. ஒருசில நேரங்களில் இலங்கை கடற்படையின் உதவியுடன் அவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்ட போதும் அதற்காக பெருமளவு பணம் செலவாகியது. இப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காகவே இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்றொழிலார்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளின் உதவி பெற்றுக் கொள்ளப்படும்.
கடற்றொழிலாளர்கள் முகங்கொடுத்துவரும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்த கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம், இலங்கை கடற்படை மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, இத்திட்டத்தை துரிதமாக அமுல்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கிய அதிகாரிகள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்”.
இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கடற்றொழில் இராஜாங்கஅமைச்சர் பியல் நிசாந்த உரையாற்றுகையில் “உலகளாவிய ரீதியில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ள கடற்றொழில் நலவலுவூட்டல் திட்டம் கடற்றொழிலாளர்களுக்கு ஒரு வரப்பிராசாதமாகும். நாடெங்குமுள்ள 24 வைத்தியசாலைகளில் இத்திட்டம் இன்றுமுதல் அமுல்படுத்தப்படும். மாதக்கணக்கில் கடலில் தொழில் புரியும் ஆழ்கடல் மீனவர்களுக்கு முதலுதவிக்குத் தேவையான மருந்து உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இவ்வைபவத்தில் பயிற்சிகளை நிறைவு செய்த கடற்றொழிலாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் மருத்துவச் சான்றிதழ்கள் அமைச்சர் மற்றும் இராஜாங்கஅமைச்சரினால் வழங்கப்பட்டன.
கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயனாகுமாரி சோமரத்ன, கடற்றொழில் திiணைக்களப் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த ,சுகாதார திணைக்கள தொற்றாநோய்ப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் திருமதி சம்பிகா விக்கிரம ஆராச்சி, இலங்கை கடற்படை மருத்துவப் பிரிவின் மருத்துவர் தினேஷ் ஆரியதேவ, இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சத்தியநாதன்,வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எர்வின் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.