சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்ட நாடாக அடுத்த மாதம் அறிவிக்குமென ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மிகக் குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வந்த நாடாக இலங்கை மாறுமென, டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
“கிரேக்க மக்கள் வங்குரோத்து நிலைமையின் பின்னர் நான்கு அரசாங்கங்களை கவிழ்த்தனர். வங்குரோத்து நிலையிலிருந்து மீள பத்து வருடங்களானது. ஆர்ஜென்டினாவிலும் லெபனானிலும் அதே நிலைமைதான். எனினும், மிகக் குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் நாடாக நமது நாடு மாறப்போகிறது.அடுத்த மாதம் மீண்டுவரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இலங்கையை சர்வதேச நாணய நிதியம் பிரகடனப்படுத்த வாய்ப்புள்ளது” என சேனாரத்ன தெரிவித்தார். ‘நாம் வாழ்வதற்கு ஒரு நாடு வேண்டும். நான் நாட்டுக்கு ஆதரவான அரசியல்வாதி. உண்மையைப் பேச நாம் பயப்படக் கூடாது. சர்வதேச நாணய நிதியம் (IMF) தொடர்பான பிரச்சினைகள் வரும்போது நான், அரசியல் கட்சிகளின் நிறக் கண்ணாடியைப் பார்ப்பதில்லை. மக்களின் துன்பங்களை வைத்து அரசியல் செய்வது எனது கொள்கையல்ல.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையை வங்குரோத்து நிலையில்லாத நாடாக மிக விரைவில் பிரகடனம் செய்யும். இது, அரசியலுக்கு அப்பாற்பட்டு வெளியிடும் அறிக்கை எனவும் டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.