கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரியில் ஆரம்பமாவதையிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலை வளாகங்களையும் சுத்தப்படுத்தும் தேசிய டெங்கு ஒழிப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிஜித் சுமனசேன தெரிவித்தார். தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்தின் அறிவுறுத்தலுக்கமைய, உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு திட்டம் துரிதகதியில் முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்த அவர், இம்மாதம் 31ஆம் திகதியுடன் இந்த வேலைத்திட்டம் நிறைவடையுமெனவும், தெரிவித்தார்.
தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், தற்போது மழையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைகின்றது. இந்நிலையில், நுளம்புப் பெருக்கத்துக்கு சாதகமான சூழல் உள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.