2023–2025 வரையான காலப்பகுதியில் இலங்கை திறந்த அரச கூட்டிணைவு தேசிய செயல் திட்டம் (Open Government Partnership National Action Plan) தொடர்பில் மக்கள் கருத்தறிய ஜனாதிபதி செயலகம் எதிர்பார்த்துள்ளது.
“திறந்த அரச கூட்டிணைவு” என்பது சிவில் சமூக மற்றும் பிரஜைகளுக்கு இடையிலான கூட்டிணைவினூடாக வெளிப்படைத்தன்மை, ஒத்துழைப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தின் திறந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்பாகும்.
இதுவரையில், 75 நாடுகளும் 104 உள்ளூராட்சி நிறு வனங்களும் ஆயிரக்கணக்கிலான சிவில் சமூக அமைப்புக்களும் திறந்த அரச கூட்டிணைவு வேலைத்திட்டத்துடன் தொடர்புபட்டுள்ளன. திறந்த அரச கூட்டிணைவு வேலைத் திட்டத்தின் உறுப்பினராக இலங்கை, 2023 – 2025 வரையான காலப்பகுதிக்கான செயல் திட்டத்தை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் அமைச்சரவை அனுமதியுடன் அரச மற்றும் சிவில் தரப்பினர்களுடன் ஒன்றிணைந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. திறந்த அரச கூட்டிணைவு வேலைத்திட்டத்தின் இணை செயற்பாட்டாளராக தங்களது பெறுமதியான ஆலோசனைகளை வழங்குவதற்கான வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கைக்குள் திறந்த, ஒத்துழைப்புடன் கூடிய பொறுப்புக்கூறும் அரச நிர்வாக முறைமையொன்றை மேம்படுத்த மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. மேலதிக விபரங்களை ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.presidentsoffice.gov.lk ஊடாக காணலாமென்றும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.