தாய்வான் தீவுப் பகுதியைச் சுற்றி சீன இராணுவ நடவடிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தாய்வான் அறிவித்தது, ஒன்பது விமானங்கள் தாய்வான் ஜலசந்தியைக் கடந்து சென்றதோடு போர்க்கப்பல்கள் “போர் தயார்நிலை ரோந்துகளை” மேற்கொண்டுள்ளன.
ஜனநாயக ஆட்சி காணப்படும் தாய்வானை, சீனா தனது சொந்தப் பிரதேசம் என உரிமை கொண்டாடி வருகிறது, கடந்த நான்கு ஆண்டுகளாக சீன இராணுவத்தின் வழக்கமான ரோந்து மற்றும் பயிற்சிகள் தீவுக்கு அருகில் முன்னெடுக்கப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்காக கடந்த வாரம் சென்பிரான்சிஸ்கோவில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தபோது, தாய்வானைச் சுற்றியுள்ள அந்த இராணுவ நடவடிக்கையின் அளவு குறைந்துள்ளது.
ஆனால் ஒன்பது சீன விமானங்கள் தாய்வான் ஜலசந்தியின் இடைக் கோட்டைக் கடப்பதைக் கண்டறிந்ததாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது .
சம்பந்தப்பட்ட விமானங்களில் Su-30 மற்றும் J-10 போர் விமானங்களும், மின்னணு போர் விமானங்களும் அடங்கும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விமானம் சீன போர்க்கப்பல்களுடன் இணைந்து “கூட்டு போர் தயார்நிலை ரோந்துகளை” மேற்கொண்டு வந்தது.
சீனாவுடன் பலமுறை பேச்சு வார்த்தைகளை முன்வைத்த தாய்வான் அரசாங்கம், பெய்ஜிங்கின் இறையாண்மை உரிமைகோரல்களை நிராகரிக்கிறது மற்றும் தீவின் மக்கள் மட்டுமே தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என்றும் கூறுகிறது.
தாய்வான் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை ஜனவரி 13 அன்று நடத்துகிறது, சீனாவுடனான தீவின் பரபரப்பான உறவுகள் இந்தப் பிரச்சாரத்தில் ஒரு முக்கியமான தலைப்பாக உள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சீனா தாய்வானைச் சுற்றி இரண்டு பெரிய அளவிலான போர்ப் பயிற்சிகளை நடத்தியது, இருப்பினும் சீனாவின் விமானப்படை தீவின் மீது அல்லது அதன் பிராந்திய வான்வெளிக்குள் பறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.