கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் இந்து மன்ற ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குருபூசை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை, கலாசாலை அதிபர் த.சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கத்தில் கலாசாலை வாயிலில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் திருவுருவச் சிலைக்கு கலாசாலை அதிபர் ச. லலீசனும் இந்து மாமன்ற காப்பாளரும் விரிவுரையாளருமாகிய கு.பாலசண்முகனும் மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து கலாசாலை விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரிய மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர். கலாசாலை ஆசிரிய மாணவர்கள் சமய வேறுபாடின்றி ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குறித்து தாங்கள் அறிந்ததை சபையின் முன் குறுகிய நேர உரையாக சமர்ப்பித்தனர்.
நிகழ்வின் கருத்துரைகளை பிரதி அதிபர் த.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழ்த்துறை விரிவுரையாளர் வேல் நந்தகுமார் ஆகியோர் ஆற்றினர். இந்து மன்ற காப்பாளர் கு. பாலஷண்முகன் நிறைவுரை ஆற்றினார். நிகழ்ச்சியினை மாணவர் மன்ற தலைவர் சு தனசீலன் நெறிப்படுத்தினார். நிகழ்வில் வரவேற்புரையை க.பிரசாந்தனும் நன்றியுரையை ச.கஜராஜூம் நிகழ்த்தினர்.
(கோப்பாய் நிருபர்)