நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பலாங்கொடைப் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக வெஹின்தென்ன பிரதேசத்தில் நேற்றிரவு (12) 8.00 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு நபர்கள் காணாமல் போயுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ். ரணசிங்க தெரிவித்தார்.
இவ்வனர்த்தத்தின்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் 7 வீடுகள் காணப்படுவதாகவும், இந்நிலச்சரிவின் காரணமாக ஒரு வீடு மாத்திரம் முழுமையாக மண்ணால் மூடப்பட்டுள்ளதாகவும் மேலும் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த பகுதியில் இருந்த ஏனைய குடும்பத்தினர் பாதுகாப்பாக வேறு இடங்களுக்குகு மாற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
காணாமல் போயுள்ள நபர்களை தேடும் பணிகளில் பொதுமக்களுடன் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் எஸ். ரணசிங்க மேலும் தெரிவித்தார்.
பலாங்கொடை தினகரன் நிருபர்