தமிழ்நாட்டின் திருச்சியிலிருந்து வெளிவரும் இனிய நந்தவனம் மாத சஞ்சிகை ஒவ்வொரு மாதமும் சிறப்புமலர்களை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் நவம்பர் மாதம் இராமநாதபுரம் மாவட்டச் சிறப்புமலராக வெளியிடப்பட்டுள்ளது
இம்மலரின் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் 11 ஆம் திகதி இராமநாதபும் தமிழ்ச்சங்கம் ஏற்பாட்டில் அரவிந்த அரங்கத்தில் நடைபெற்றது. இராமநாதபுரம் தமிழ்ச்சங்கப் பொருளாளர் கா.மங்கள சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் திருமதி இலதா சேஷாத்திரி இறைவாழ்த்துப் பாட, தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் தமிழ் இசை நிகழ்த்தினர்.
‘குறளமுதம்’ என்ற தலைப்பில் கவிஞர் மோகனபாரதியும், ‘நல்ல தமிழ் நவில்வோம்’ என்ற தலைப்பில் நல்லாசிரியை தமிழரசி உதயகுமாரும் உரை நிகழ்த்தினர். கவிஞர் பா. தீனதயாளன் ‘சிரிக்க சிந்திக்க’ என்ற தலைப்பில் பேசி அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். தமிழ்ச் சங்கத் தலைவர் மை.அப்தூல்சலாம் ‘இலக்கிய இன்பம்’ என்ற தலைப்பில் மலைபடுகடாம் (எ) கூத்தராற்றுப்படை பற்றி உரை நிகழ்த்தினார்
இனிய நந்தவனம் இராமநாதபுரம் சிறப்புமலரை பிரதம ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் அறிமுகப்படுத்த, முதல் பிரதியை தமிழ்ச் சங்கத்தின் மகளிர்அணித் தலைவி மருத்துவர் மதுரம் அரவிந்தன் வெளியிட்டார். கு.விவேகானந்தன், தமிழ்ச்சங்க துணைத்தலைவர் வைக்கிங் மு.ச.கருணாநிதி, நல்லாசிரியை கா. காளீஸ்வரி சுகுமார், இனிய நந்தவனம் இணையாசிரியர் கவிஞர் பா.தென்றல் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்.
இந்த இலக்கிய விழாவின் இன்னொரு சிறப்பு நிகழ்வாக சென்னை சி.கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரியின் முதல்வரும் எழுத்தாளருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுதிய ‘பன்முக நோக்கில் கலைஞரின் படைப்பிலக்கியம்’, ‘வனப்ப’, ‘மொழிப்போரும் தமிழ் கவிதையும்’, ‘செல்வக்கேசவராயம்’ ஆகிய நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன. எழுத்தாளர் வெ.கா சேக்கிழார், சமூக ஆர்வலர் நா. காயாம்பு ஆகியோர் நூலாய்வு செய்தனர்.
‘குரலற்றவர்களின் குரல்’ என்ற தலைப்பில் கவிஞர் கா . மங்கள சுந்தரமூர்த்தி தலைமையுரையாற்ற, வழக்கறிஞர் இரா. ராஜீவ்காந்தி ‘கலைஞரின் படைப்புலகம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும் போது, தமிழ்நாட்டில் திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்து மிக உயர்ந்த சிலையையும் வள்ளுவர் கோட்டத்தையும் உருவாக்கி திருவள்ளுவரையும் திருக்குறளையும் மக்களிடம் கொண்டு சென்ற பெருமை முத்தமிழறிஞர் கலைஞருக்கு மட்டுமே உண்டு என்று குறிப்பிட்டார்.
நிறைவாக கவிஞர் செ.மாணிக்கவாசகம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.