34 வருடங்களுக்கு பின் கண்டியில் குடியரசு பெரஹரா

- 75 ஆவது சுதந்திர தினத்தையிட்டு பெப்ரவரி 19 இல்

கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் 34 ஆண்டுகளுக்குப் பின், ஐந்தாவது முறையாக குடியரசு பெரஹரா, எதிர்வரும் பெப்ரவரி 19ஆம் திகதி கண்டி நகரில் வீதிஉலா வரவிருக்கிறது. 

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இந்த நிகழ்வு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்  தலைமையில் இதன்  ஆரம்ப நிகழ்வு  நடைபெறவுள்ளது.

பெப்ரவரி 19ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு கண்டி மங்களகூடத்தில்  இருந்து ஆரம்பிக்கும் பெரஹரா, தலதா வீதி, யட்டிநுவர வீதி, கந்த வீதி வழியாக   ரஜ வீதியில் பிரவேசித்து மீண்டும்  தலதாமாளிகையை வந்தடையும் என தலதா மாளிகை இணைப்பாளர் மற்றம் கலாசார அதிகாரி ஜெயம்பதி வெத்தகல தெரிவித்தார்.

வருடாந்த எசல பெரஹெர போன்று யானைகள் மற்றும் நடனக் குழுக்களால் இந்த குடியரசு பெரஹராவை வண்ணமயமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  ஜயம்பதி வெத்தகல மேலும் தெரிவித்தார்.

ஆனால் இந்த பெரஹராவிற்கு புனிததந்தம்  கொண்டுவரப்பட மாட்டாது என்பதோடு , மாறாக குடியரசு சின்னம் மாத்திரம்  வீதி உலா வரும் .

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இம்முறை  பெரஹரா  ஏற்பாடு செய்யப்படுவதுடன்,  பெரஹராவை காணவரும் மக்களுக்காக கண்டி பெரஹரா வீதியில்  வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் மிகவும் விசேடமான மற்றும் முக்கியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீ தலதா மாளிகையினால் இவ்வாறான விசேட  பெரஹராகள் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது பெரஹரா 1875 இல் நடைபெற்றது, மேலும் இது விக்டோரியா மகாராணியின் மகன் வேல்ஸ் பிரபு இலங்கைக்கு வருகை தந்ததை முன்னிட்டு நடத்தப்பட்டது.  

1954 ஆம் ஆண்டு இலங்கையின் அரச தலைவரான இரண்டாம் எலிசபெத் மகாராணி இலங்கைக்கு வருகை தந்த பின்னர் இரண்டாவது  பெரஹரா நடத்தப்பட்டு அதனை  எண்கோண மண்டபத்திலிருந்து (பத்திரிப்புவ)  எலிசபெத் மகாராணி கண்டுகளித்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது  பெரஹரா  1981 இல் நடைபெற்றதோடு அதைக் காண  இரண்டாவது எலிசபெத் மகாராணி  வருகை தந்திருந்தார். மகா மண்டபத்தில் (மஹமலுவ) அமைக்கப்பட்ட விசேட மேடையில் இருந்து  அவர் பெரஹராவை பார்வையிட்டார். 

1987 ஆம் ஆண்டு நான்காவது குடியரசு  பெரஹரா  இலங்கையின் அப்போதைய பிரதமர்  ரணசிங்க பிரேமதாசவினால் நடத்தப்பட்டது. இவ்வருடம் ஐந்தாவது  குடியரவு பெரஹரா  நடைபெறுகிறது.


Add new comment

Or log in with...