அரச ஊழியர்களின் சம்பளம் உரிய திகதியில்

- நிறைவேற்று தர ஊழியர்கள் உச்சபட்சம் ஒரு நாள் தாமதம்
- அரசின் ஜனவரி மொத்த செலவினம் ரூ. 625 பில்லியன்
- உரிய வருமானம் கிடைத்தாலும் ரூ. 480 பில்லியன் பற்றாக்குறை

நிறைவேற்று தரத்தில் இல்லாத அரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரி 25ஆம் திகதியும், நிறைவேற்று தர ஊழியர்களுக்கு அன்றைய தினம் அல்லது மறுதினம் (26) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்பட்ட ரூபா 93 பில்லியனில் சம்பளம் வழங்குவதற்காக ரூபா 87 பில்லியன் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரச ஊழியர்களுக்கு ஜனவரி 25ஆம் திகதி திட்டமிட்டபடி சம்பளம் வழங்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்றதிகார தரத்திலுள்ள அதிகாரிகளுக்கு அன்றைய தினத்திலோ அல்லது ஒரு நாள் தாமதமாகவோ சம்பளம் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாதத்தில் அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருமானம் ரூ. 145 பில்லியன் ஆகும். ஆயினும் தமது மாதாந்த வருமான இலக்கு சுமார் ரூ. 10 பில்லியன் இனால் குறையும் என சுங்கம் மற்றும் கலால் திணைக்களங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளன. ஜனவரி மாதத்தில் அரசாங்கத்தின் மொத்த செலவினம் ரூ. 625 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், திட்டமிடப்பட்ட வருமானம் கிடைத்தாலும் ரூ. 480 பில்லியன் பற்றாக்குறை நிலவுமென இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

அரச உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த சம்பளக் கொடுப்பனவை குறித்த தினத்தில் செலுத்துவதற்கும், நிறைவேற்று பதவிநிலை உத்தியோகத்தர்களின் சம்பளத்தை ஒரு சில தினங்கள் தாமதமாக செலுத்துவதற்கும் கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டிருந்தது.


Add new comment

Or log in with...