குளவிக்கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவர்கள்; வைத்தியசாலையில் அனுமதி

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் எலிபடை தமிழ்  வித்தியாலய மாணவர்கள் 14 பேர் இன்று(15) காலை 7.30 மணியளவில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் போது, அப்பகுதியில் இருந்த மரத்தில் காணப்பட்ட குளவிக்கூடே இவ்வாறு கலைந்து மாணவர்களை கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தரம் 5,7,8,9,10,11 வகுப்புக்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்களில் 4 பேர் தொடர்ந்தும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, 10 பேர் சிகிச்சை பெற்று வீடு  திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(ஹட்டன் சுழற்சி நிருபர்)