இரு பிள்ளைகளை கிணற்றில் வீசிய தந்தை; மாவடிச்சேனையில் சம்பவம்

மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளை தந்தையொருவர் கிணற்றினுள் வீசி கொலை செய்த  சம்பவமொன்று இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் 40 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசிக்கும் 07, 10 வயதுகளையுடைய பிள்ளைகளே  இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இன்று நள்ளிரவு இரண்டு மணியளவில் பிள்ளைகளின் கூக்குரல் கேட்டு,  அயலவர்கள் ஓடி வந்து கிணற்றிலிருந்து பிள்ளைகளை மீட்கும்போது பிள்ளைகள் உயிரிழந்து காணப்பட்டனர்.

தற்போது  இரண்டு பிள்ளைகளின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த பிள்ளைகளின் தாய் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில்  பிள்ளைகள்,  கொழும்பு பிரதேசத்திலுள்ள காப்பகமொன்றில்  சேர்த்து கல்வி கற்று வந்துள்ளனர். கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் பிள்ளைகளை வேறு பாடசாலைகளில் சேர்ப்பதற்காக இடைவிலகல் மேற்கொண்டு அழைத்து வந்திருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

(கல்குடா தினகரன் நிருபர் - எஸ்.எம்.எம்.முர்ஷித், எச்.எம்.எம்.பர்ஸான்)
 


Add new comment

Or log in with...