யுத்த காலத்தில் பலர் அரசியல் கைதிகளாக கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் பலரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுதலை செய்துள்ளதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், இதற்காக தாம் நன்றி தெரிப்பதாகவும் கூறினார். இந்நிலையில் எஞ்சியுள்ள அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு தான் கோருவதாகவும், அவர் தெரிவித்தார்.
விட்டுக்கொடுப்புடன் முன்னோக்கிச் செல்ல வேண்டுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அவ்வாறாயின் ஆனந்த சுகாதரன் போன்ற அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறும், அவர் கோரினார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (08) நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றிய போது, “ஆனந்த சுதாகரனுடைய பிள்ளைகளின் நலன் கருதி ஆனந்த சுதாகரனையும் ஏனைய அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். இதற்கு விசேட குழு அமைத்து, கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.