அம்பாறை மாவட்ட ஆசிரியர் இடமாற்றத்தை இரத்துச் செய்ய உதவிய ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹரீஸ் எம்.பி. தெரிவித்த போது,
அம்பாறையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவிருந்த ஆசிரியர் விவகாரம் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஜனாதிபதி செயலாளரிடம் நான் கலந்துரையாடினேன்.
இந்நிலையில் என்னுடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஆசிரியர் இடமாற்ற விவகாரம் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தி, இடமாற்றத்தை இரத்துச் செய்ய தான் பணித்துள்ளதாக எனக்கு அறியத்தந்துள்ளார்.
கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோவில் கல்வி வலயங்களிலிருந்து 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முறையான பதிலீடின்றி இடமாற்றம் செய்யப்படுவதால், கல்வியில் அம்பாறை பின்னோக்கி செல்லும் நிலை மற்றும் மாணவர்களின் கல்வி சீரழியும் ஆபத்தையும் ஜனாதிபதி செயலாளருக்கும் ஆளுநருக்கும் நான் விளக்கினேன். இவ்விடயத்தில் கரிசனை செலுத்திய ஜனாதிபதி செயலாளருக்கும் ஆளுநருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.