இந்தியாவின் மேற்கு மாநிலமாக விளங்கும் குஜராத்தில் 18.75 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீடுகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் கைச்சார்த்திடப்பட்டுள்ளன.
இம்மாநிலத்தின் முக்கிய துறைகளது உற்பத்தி திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இருபதாண்டு முதலீட்டு மன்றம் திறந்து வைக்கப்படவிருக்கும் சூழலில் இந்த முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன.
இந்த ஒப்பந்தங்களில் கைச்சார்த்திட்டுள்ள நிறுவனங்களில் வெல்ஸ்பன் எண்டர்பிரைஸும் ஒன்றாகும். இந்நிறுவனம் பகுதியளவிலான பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா வசதிகளை உருவாக்கும் நோக்கில் 5.11 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
இதேவேளை அரச ஆதரவு பெற்ற வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் 1.74 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடன்களாக வழங்கவும், விவசாய மற்றும் கிராமிய அபிவிருத்திக்கான தேசிய வங்கி 260 பில்லியன் ரூபா நிதியை வழங்கவும் குஜராத்தில் உருக்கு உற்பத்தியை மேற்கொள்ளும் அர்சீலர் மிட்டல் நிப்பொன் ஸ்டீல் நிறுவனம் ஏற்கனவே நடைமுறையிலுள்ள முதலீட்டை மேலும் 125 பில்லியன் ரூபாவினால் மேம்படுத்தவும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
குஜராத் மாநிலத்தில் சக்தி பரிமாற்றம், மின்சக்தி மற்றும் துறைமுகத் துறைகளில் 550 பில்லியன் ரூபாவை முதலீடு செய்யப்போவதாக எஸ்ஸர் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமாக விளங்கும் குஜராத்தில் திறக்கப்படும் முதலீட்டு மன்றத்தில் ஏனைய மாநிலங்களின் தலைவர்களும் வர்த்தக முக்கியஸ்தர்களும் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.