இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை 3–2 என கைப்பற்றியது.
டிரினிடாட், பிரையன் லாரா மைதானத்தில் நேற்று முன்தினம் (21) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 132 ஓட்டங்களுக்கே சுருண்டது. ஆரம்ப வீரர் பில் சோல்ட் 22 பந்துகளில் பெற்ற 38 ஒட்டங்களும் அதிகபட்சமாகும்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த மேற்கிந்திய அணி வெற்றி இலக்கை எட்டுவதற்கு கடைசி ஓவர் வரை போராட வேண்டி இருந்தது. அந்த அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 133 ஓட்டங்களை எட்டியது. மத்திய வரிசையில் சாய் ஹோப் கடைசி வரை களத்தில் இருந்து 43 பந்துகளில் ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களை பெற்றார். ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரையும் 2–1 என இழந்தது.
இந்தியாவில் அண்மையில் நடந்து முடிந்ந ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நடப்புச் சம்பியனாக களமிங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பச் சுற்றுடனேயே வெளியேறியது. எனினும் மேற்கிந்திய தீவுகள் அணி உலகக் கிண்ணத்தில் ஆடவே தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.