நடுவரை மிரட்டிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து இங்கிலாந்து மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகளின் சகலதுறை வீரர் டொம் கரனுக்கு அவுஸ்திரேலிய பிக் பாஷ் லீக் தொடரில் நான்கு ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார்.
லோன்சன்டனில் ஹோர்பாட் ஹரிகன் அணிக்கு எதிராக கடந்த டிசம்பர் 11 ஆம் திகதி நடைபெற்ற சம்பவத்திற்காகவே கரனுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கு முன்னரான பயிற்சியின்போது கரன், நடுவர் ஒருவருடன் முரண்பட்டதை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை கண்டறிந்துள்ளது.
எனினும் இதன்போது கரன் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் அவரது அணி இந்த முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.
போட்டிக்கு முன்னர் ஆடுகளத்தின் மேற்பார்வைக்கு பொறுப்பான நான்காவது நடுவர், ஆடுகளத்தை மிதிக்க வேண்டாம் என்று கரனை கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் கரன் குறுக்காக நின்ற நடுவரை மோத வருவது போல் ஓடிவந்து விலகிச் சென்றார்.
இது அவுஸ்திரேலிய கிரிக்கெட் விதியில் நடுவர் அல்லது போட்டி மத்தியஸ்தரை மிரட்டுவது அல்லது மிரட்ட முயற்சிப்பதாக கருதப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்காக இதுவரை 2 டெஸ்ட், 28 ஒருநாள் மற்றும் 30 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கும் டொம் கரன் 2021 ஜூன் மாதத்திற்குப் பின் இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.