கையடக்க தொலைபேசி, சிகரெட், பீடி மறைத்து எடுத்துச் செல்ல முயன்ற போதே இரு அதிகாரிகளும் கைதாகினர்
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குள் போதைப்பொருள், கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல முயன்ற சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையின் பிரதான வாயிலின் அருகாமையில் பொலிஸார், பொலிஸ் விசேட செயலணி மற்றும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சிறைச்சாலைக்குள் போதைப்பொருள், சிகரெட், பீடி மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை எடுத்துச் செல்ல முற்பட்ட போதே மேற்படி சிறைச்சாலை அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி சிறைச்சாலையில் பணிபுரியும் சிறைச்சாலை தொழில் ஆலோசகர் மற்றும் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டாளருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி இருவரும் இப்பொருட்களுடன் சிறைச்சாலைக்குள் பிரவேசிப்பதற்கு முயற்சித்த போது அவர்களை சோதனையிட்ட போதே அந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலை தொழில் ஆலோசகர் மறைத்து வைத்திருந்த ஐஸ் போதைப்பொருள் 110 மில்லிகிராம், இரண்டு பீடிகள் மற்றும் ஒரு சிகரெட் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதுடன், சிறைச்சாலை கட்டுப்பாட்டாளரிடமிருந்து சந்தேகத்திற்கிடமான ஒரு சிறு கையடக்கத் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான சிறைச்சாலை அதிகாரிகள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 21ஆம் திகதி பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் போது சந்தேக நபர்கள் இருவரையும் அங்குனுகொலபெலஸ்ஸ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்