நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில், கடந்த 24 மணித்தியாலங்களில் 2,296 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் 109 பேரை, தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
மேலும் 14 சந்தேக நபர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன்184 சந்தேக நபர்கள் புனர்வாழ்வுக்காக புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் விசேட செயலணிப் பிரிவின் பட்டியலில் தேடப்படும் சந்தேக நபர்கள் 218 பேரும் இந்நடவடிக்கைகளின் போது கைதாகினர்.
24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், 01 கிலோவுக்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருள், 648
கிராம் ஐஸ்போதைப் பொருள், 11 கிலோவுக்கு அதிகமான கஞ்சா, 46 கிலோகிராம் மாவா போதைப்பொருள், போதை மாத்திரைகள் 19,507 ஆகியவற்றையும் கைப்பற்ற முடிந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்