பெய்ஜிங்: சீனாவின் வடமேற்குப் பகுதியில் நேற்று (18) அந்நாட்டு நேரப்படி இரவு 11.59 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குறைந்தபட்சம் 111 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என மாகாண நிலநடுக்க நிவாரண தலைமையகம் தெரிவிக்கின்றது. சீனாவின் வடமேற்கே கன்சு மாகாணத்தில் ஜிஷிஷான் கவுன்டி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என மாகாண நிலநடுக்க நிவாரண தலைமையக செய்தி தெரிவிக்கின்றது.
இதுபற்றி அமெரிக்க புவியியல் அமைப்பு வெளியிட்டு உள்ள செய்தியில், கன்சு மாகாணத்தில் உள்ள லிங்சியா செங்குவான்ஜென் பகுதியில் இருந்து 37 கி.மீ. தொலைவில் மற்றும் லான்ஜவ் நகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.
நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தின் தீவிரம் அதிகமாக இருந்ததால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்தது உள்ளிட்ட பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் பீதியடைந்த மக்கள் பாதுகாப்பு கருதி வீடுகளைவிட்டு வெளியேறி வீதிகளில் ஓடியதாகவும் அரசாங்க ஊடகமான சின்ஹுவா தெரிவித்தது.
கட்டட இடிப்பாடுகளில் சிக்கி இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 230க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தை அடுத்து சில கிராமங்களில் மின்சாரம், தண்ணீர் விநியோகம் தடைபட்டதாகக் கூறப்பட்டது
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணிகளில் ஈடுபட உடனடியாக அவசர மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். சீனாவில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.