பேருவளை, சீனன்கோட்டை பள்ளிச்சங்க உப தலைவரும் இரத்தினக்கல் வர்த்தகரும் பரோபகாரியுமான எம்.எஸ்.எம். ரஸ்வி ஹாஜியார் (வயது 71) நேற்று (04) சீனன்கோட்டை இல்லத்தில் காலமானார். இவர், சீனன்கோட்டை அல் -ஸலாஹ் அறபிக்கல்லூரி, சீனன்கோட்டை ஸகாத் சங்கம் ஆகியவற்றின் நிர்வாக சபைத் தலைவரும் பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம், இக்ரா தொழில்நுட்பக்கல்லூரி ஆகியவற்றின் நிர்வாக சபை உப தலைவருமாக, இறுதி வரை பதவி வகித்தவர். சீனன் கோட்டை பிரதேசத்தின் கல்வி மறுமலர்ச்சிக்காகவும் பிரதேச அபிவிருத்தி, சமூக சமய கலாசார மேம்பாட்டுக்காகவும் வாரி வழங்கிய ஒரு பரோபகாரியாகவும் இவர் செயற்பட்டார்.
ஐந்து பிள்ளைகளின் தந்தையான அன்னாரின் ஜனாஸா, நேற்று அஸர் தொழுகையின் பின் சீனன்கோட்டை பாஸியா பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்தில் உலமாக்கள், சீனன்கோட்டை பள்ளிச் சங்க நிர்வாகிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு சமூகங்களைச்சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஊர் பிரமுகர்கள், சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள், அரபுக் கல்லூரிகளின் உஸ்தாத்மார்கள், மத்ரஸா மாணவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உட்பட பெருந்திரளானோர் ஜனாஸாவில் பங்குபற்றினர்.
அஜ்வாத் பாஸி