Friday, April 26, 2024
Home » 2024 வரவு – செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில்
2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலமான

2024 வரவு – செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில்

- நண்பகல் 12.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் உரை நிகழ்த்துவார்

by damith
November 13, 2023 6:50 am 0 comment

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (13) திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இன்று நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து, விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இம்முறை வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு, வசதி குறைந்த மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் என பல முன்மொழிவுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவுசெலவுத்திட்ட விவாதம் நாளை (14 ) முதல் எதிர்வரும் (21) வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்த ஏழு நாட்கள் இடம்பெறவுள்ளன.

அத்துடன், வரவு செலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் (21) செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, குழுநிலை விவாதம் எதிர்வரும் (22) புதன்கிழமை முதல் டிசம்பர் (13) புதன்கிழமை வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்த 19 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

இதற்கமைய, 2024 நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் (13) புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்காக அரசினால் 3இலட்சத்து 86084 கோடியே 6788000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்காக மொத்தமாக 56445 கோடியே 8500000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய தினம் ஜனாதிபதியினால் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுவதை முன்னிட்டு, பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த (10) பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வு அறைகள், உடை அலுமாரிகள் உட்பட பாராளுமன்றக் கட்டிடம் பாதுகாப்பு படையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் இன்றைய தினம் பொதுமக்கள் கலரி விசேட அதிதியினருக்கு மாத்திரம் திறந்திருக்கும். சபாநாயகர் கலரி தூதுவர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு இன்றைய தினம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இன்றைய தினம் பாராளுமன்ற வாகனத் தரிப்பிடம் மூடப்படுவதால் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தருகின்ற வாகனங்கள் உரிய வாகனத் தரிப்பிடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தரும்போது சாரதி ஒருவரை மாத்திரம் அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT