அஞ்சலோ மத்தியூஸுக்கு டைம் அவுட் முறையில் ஆட்டமிழப்பு வழங்கப்பட்ட விவகாரத்தில் பங்களாதேஷ் அணித் தலைவர் ஷகீப் அல் ஹசன் மீது அவதூறு கூறிய குற்றச்சாட்டில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸுக்கு எதிராக பங்களாதேஷ் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் இலங்கைக்கு எதிரான அந்தப் போட்டியில் மத்தியூஸுக்கு டைம் அவுட் ஆட்டமிழப்பு வழங்கப்பட்டபோது ரசல் ஆர்னலுடன் தொலைக்காட்சி வர்ணனையாளராக வக்கார் யூனிஸ் செயற்பட்டிருந்தார்.
அப்போது இதனை விளையாட்டுத் தன்மையற்ற செயல் என விமர்சித்த வக்கார் யூனிஸ், ஷகீபின் நடத்தை மற்றும் பங்களாதேஷின் மூலோபாயம் பற்றியும் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வலியுர் ரஹ்மான் கான் தாக்கல் செய்த மனு மீது கடந்த புதனன்று (8) நீதிபதி முஸ்தபா சமான் மற்றும் நீதிபதி எம்.டி ஆயதுல்லா அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. இதில் தற்போது நடைபெற்று வரும் உலகக் கிண்ணத்தில் வர்ணனையாளராக செயல்படும் வக்கார் யூனிஸை நீக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸிலுக்கு முறைப்பாடு செய்யாதது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மற்றும் அதன் தலைவர் 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.