நுவரெலியா தபால் அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் மற்றுமொரு திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி எடுத்த தீர்மானத்துக்கு உடன்படுவதாக போக்குவரத்து. நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தபால் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றி, தற்போதுள்ள இடத்தில் வேறு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், அப்பகுதி மக்களின் வருமானம் அதிகரித்து வேலை வாய்ப்புகள் உருவாகும். இது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் முக்கியமாக அமையும் என்றும் அமைச்சர் கூறினார். .
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஷங்ரிலா ஹோட்டலை நிர்மாணிப்பதற்காக கல்லுமுத்தூர காணியை தனியாருக்கு விற்பனை செய்ததன் பின்னர், எந்தவொரு காணியையும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதில்லையென்று அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. ஆனால், அரசு எந்த நிலத்தையும் வரியின் அடிப்படையில் திட்டங்களுக்கு வழங்குகிறது. பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், புறக்கோட்டை,கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பெந்தோட்டை, ஹிக்கடுவ, அனுராதபுரம் போன்ற ரயில் நிலையங்களுக்கருகில் ரயில்வே நகரத்தை (ஸ்டேஷன் பிளாசா) நிர்மாணிப்பதற்கான யோசனையை முதலீட்டாளர்கள் முன்வைத்தால் அது,அமைச்சரவையில் முன்வைக்கப்படும்.