அமெரிக்காவின் மெய்ன் மாநிலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின் சந்தேக நபரைத் தேடும் பணியை பொலிஸார் விரிவுபடுத்தியுள்ளனர்.
காடுகள், சிறிய நகரங்கள் என மாநிலத்தின் தெற்குப் பகுதி முழுக்க அதிகாரிகள் சந்தேக நபரைத் தேடுகின்றனர்.
இந்த சம்பவத்தில் 18 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 13 பேர் காயமுற்றனர். அவர்களில் மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
சம்பவம் நடந்த லெவிஸ்டன் நகரிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவில் உள்ள நகரங்களில் உள்ள கடைகள், பாடசாலைகள், மருந்தகங்கள் முதலியன மூடப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்குச் செல்லும் வீதிகளை பொலிஸார் மூடியுள்ளனர்.
சந்தேக நபரான 40 வயது ரொபர்ட் கார்ட் துப்பாக்கி சுடப் பயிற்றுவிக்கும் சான்றிதழ் பெற்றவர் என்றும் அமெரிக்க இராணுவத்தின் போர்க்காலப் படைவீரர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் கார்ட் மனநலச் சிகிச்சை நிலையத்தில் சேர்க்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.