பங்களாதேஷ் வளர்ந்து வரும் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை வளர்ந்துவரும் அணி தொடரை 3–2 என கைப்பற்றியது.
தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியினரின் விக்கெட்டுகளை முக்கிய இடைவெளிகளில் வீழ்த்த இலங்கை வளர்ந்துவரும் அணியினரால் முடிந்தது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் சமுதித விக்ரமசிங்க மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஏசியன் டானியல் தலா 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.
பங்களாதேஷ் அணிக்காக மத்திய வரிசையில் வந்த ஷஹதாத் ஹொஸைன் மாத்திரம் அதிரடியாக 75 பந்துகளில் 79 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் அந்த அணி 47 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து பதிலெடுத்தாடிய இலங்கை வளர்ந்துவரும் அணி ஓட்டம் பெறும் முன்னரே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. எனினும் மத்தியவரிசையில் சிறப்பாக ஆடிய பவன் ரத்நாயக்க 56 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 85 ஓட்டங்களை குவித்தார். இதனால் இலங்கை வளர்ந்து வரும் அணி 31.2 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 224 ஓட்டங்களை எட்டியது.
அடுத்து இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பங்களாதேஷ் வளர்ந்து வரும் அணியினர் இலங்கை வளர்ந்து வரும் அணியினருடன் இரு உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. இதன் முதல் போட்டி ஓக்டோபர் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு இரண்டாவது ஆட்டம் நவம்பர் 1ஆம் திகதி தொடக்கம் 04ஆம் திகதி வரை நடைபெறும். இந்த இரண்டு போட்டிகளும் தம்புள்ளையிலேயே நடைபெறவுள்ளது.