சிறுவர்கள் பாலியல் சுரண்டல், ஆபாச இணையதளங்களை பயன்படுத்தல், சைபர் மிரட்டல், பணம் பறித்தல் போன்றவற்றை குழு கண்காணிப்பு
டிஜிட்டல் முறையிலான துஷ்பிரயோகங்களிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையில் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் அமுல்படுத்தப்படவுள்ளது.சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் நோக்கில் இச்சட்டம் கொண்டு வரப்படவுள்ளதால், சிறுவர் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழு வழங்கவுள்ளது.
டிஜிட்டல் பயன்பாட்டினால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் சிறுவர்கள் பாலியல் சுரண்டல், ஆபாச இணையத் தளங்களை பயன்படுத்தல், சைபர் மிரட்டல் மற்றும் அதனூடாக பணம் பறித்தல், பணத்துக்காக விளையாடுவதற்கு சிறுவர்கள் பழக்கல் போன்றவை இக்குழுவினால் கண்காணிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆய்வொன்றை மேற்கொண்டு பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இக்குழுவை நியமித்திருந்தார். இக்குழுவின் அறிக்கை நேற்று (03) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
பல்வேறு பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் முழுமையான நலன்புரிகள் தொடர்பில் பரந்த ஆய்வொன்றை மேற்கொண்டு பரிந்துரைகளை முன்மொழிவதற்காக 2023 ஏப்ரல் 19 இல், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மேற்படி குழுவை நியமித்திருந்தார் .
சிறுவர்கள் பல்வேறுபட்ட வன்முறைகளுக்கு இலக்காகுவதற்கான வாய்ப்புகளை குறைத்தல் மற்றும் மட்டுப்படுத்தல், இவ்வாறு சிறுவர்கள் எதிர்கொள்ளும் வன்முறை வடிவங்களை அறிதல், அறிக்கையிடல், முகாமைத்துவ , பிரதிச் செயற்பாடுகளுக்கான பொறிமுறையை வலுவூட்டலுக்கான குறுகிய மற்றும் இடைக்கால, நீண்ட கால கொள்கை மற்றும் பரிந்துரைகளும் இந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளன. அத்துடன் இதில் 21 பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. “திரிய பியச” பொறுப்பு நிதியத்தினதும் எக்ரோமாட் அவுட்ரிச் மன்றத்தினதும் முன்னாள் தலைவி சட்டத்தரணி ஏ.கே. வீரதுங்கவின் தலைமையிலான மேற்படி குழுவில், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ, கனேடிய உலகலாவிய பல்கலைக்கழக சேவைப் பணிப்பாளர் மும்தாஸ் பலீல், பொலிடிக்ஸ் எஸ்எல்கே நிறுவன்தின் மூலோபாய நிபுணர் மலிதி ஹேரத், மகளிர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் அதிபர் மற்றும் கல்வி அறிஞர் நிர்மாலி விக்கிரமசிங்க, குடும்ப சுகாதார பணியகத்தின் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான வைத்தியர் தில்ஷானி போகொல்லாகம, அபிவிருத்தி மற்றும் விஷேட தேவைகள் நிகழ்ச்சித் திட்ட சமூக வைத்திய நிபுணர் ஆசிரி ஹேவமல்கே, ஹேமாஸ் அவுட்ரிச் மன்றத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சிரோமி மாசகோரல, “சேவ் தி சில்ட்ரன்” அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் புத்தினி விதான, இலங்கையின் சிறுவர் நோய் வைத்திய நிபுணர் அஸ்வினி டீ பெர்னாண்டோ, யுனிசெப் நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு நிபுணர் வைத்தியர் ஹேமால் ஜயவர்தன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.