ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டையும் ஒன்றாக்கி சுயாதீன சபையின் கீழ் கொண்டு வர அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்னவினால் ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர்
சேமலாப நிதியம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் கருத்து தெரிவித்த எரான் விக்கிரமரட்ண எம்பி,
ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம் என்று ஜனாதிபதி தெரிவித்து வருகின்றார். அதற்கான யோசனைகளை முன்வைக்குமாறு அவர் கோரியுள்ளார். இலங்கையின் நிதி நிலைமை தொடர்பான சில திட்டங்கள் குறித்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியுள்ளது.
குறிப்பாக ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பாக சுயாதீன முகாமைத்துவம் அவசியமாகும்.
வட்டி வீதம் உள்ளிட்ட சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது நாட்டில் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோன்று சுயாதீன வழக்குகளை தொடரும் அலுவலகம் அவசியமாகும். ஊழல், மோசடி விடயத்தில் சுயாதீனமாக வழக்கு தொடர்ந்து தண்டனைகள் வழங்கப்படவில்லை. அந்த வகையில் வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்கு கிடைக்க வேண்டுமானால் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும் இதற்காக அந்த அலுவலகம் அவசியமாகும் என்றார்.
அதன்போது அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகிய இரண்டையும் ஒன்றாக்கி சுயாதீன சபையின் கீழ், அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்லவே நாம் எதிர்பார்க்கின்றோம்.
விரும்பினால் எதிர்க்கட்சியில் உள்ளவர்களுக்கும் இது தொடர்பில் எமது அமைச்சர்களுடன் கலந்துரையாட முடியும். அதில் எந்த சிக்கலும் கிடையாது.
வழக்கு விசாரணைகள் தொடர்பிலும் அரசாங்கத்துடன் கலந்துரையாட முடியும். சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு பெரும் சுமை உள்ளது. இதனால் இவ்விடயம் தொடர்பில் நாம் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)