உபாதைக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன இன்று (04) உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணியுடன் இணையவுள்ளார்.
ஆசிய கிண்ண போட்டியின்போது தொடைப் பகுதியில் உபாதைக்கு உள்ளான தீக்ஷன கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி இந்தியா புறப்பட்டுச் சென்ற இலங்கை குழாத்துடன் இணையவில்லை. அவர் உயர் செயல்திறன் பிரிவில் தொடர்ந்து காயத்தில் இருந்து மீண்டும் வரும் சிகிச்சையை பெற்று வந்தார்.
இதேவேளை இலங்கை அணி நேற்று பங்கேற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் அணித் தலைவர் தசுன் ஷானக்க பங்கேற்கவில்லை. பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது பயிற்சிப் போட்டியில் இடது முழங்கையில் வலியை உணர்ந்ததை அடுத்தே அவர் நேற்றைய போட்டியில் இடம்பெறவில்லை.
அவருக்கு பதில் இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸ் தலைவராக செயற்பட்டார்.
அதேபோன்று பங்களாதேஷுக்கு எதிரான பயிற்சிப் போட்டியின்போது வலது தோள்பட்டையில் வலியை உணர்ந்த குசல் ஜனித் பெரேராவும் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை.