கம்பன் விழா இன்று ஆரம்பம்

கொழும்பு கம்பன் கழகத்தின் இவ்வாண்டு கம்பன்விழா இன்று 24 ம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து 25, 26, 27ஆம் திகதிகளில் கொழும்பு வெள்ளவத்தை ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கையில் கம்பன் கழகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டுடன் 37 வருடங்கள் பூர்த்தியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் இவ்வாண்டுக்கான கம்பன் விழாவின் முதல் நாளான இன்று 24 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு வெள்ளவத்தை இராமகிருஷ்ண தோட்டம், இல.11 இல் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய லஷ்மி கோயிலிலிருந்து கம்பன் திருவுருவப்படமும் சீதா _இராம விக்கிரகங்களும் இலங்கையின் பிரபல நாதஸ்வர, தவில் வித்துவான்களின் மங்கள இசையுடனும், கல்லூரி மாணவர்களின் கீழைத்தேய வாத்திய இசையுடனும், மங்கையர்களின் நிறைகுட பவனியுடனும், ஊர்வலமாக விழா மண்டபம் நோக்கி எடுத்துச் செல்லப்படுகின்றன. ஊர்வலத்தில் நம் நாட்டின் பல பாகங்களிலிருந்து வருகை தரும் பிரமுகர்களும் இந்தியா, மலேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரவுள்ள அறிஞர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

ஊர்வலத்தைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருக்கேதீஸ்வரர் ஆலயத் திருப்பணி அறங்காவலர் சபையைச் சார்ந்த வி. கயிலாசபிள்ளை தம்பதியர் மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைக்க, கடவுள் வாழ்த்தினை அ.ஆரூரன் இசைக்கவுள்ளார்.

தொடர்ந்து கொழும்புக் கம்பன் கழகத் தலைவர் தொழிலதிபர் தெ. ஈஸ்வரன் வரவேற்புரையும், யாழ். மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் கொழும்புக் கம்பன் கழகப் பெருந்தலைவருமான ஜெ. விஸ்வநாதன் தலைமையுரையும், மலேசியக் கண்ணதாசன் அறவாரியத்தின் செயலரும் மலேசிய நாட்டு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறைப் பிரதியமைச்சருமான டத்தோ எம். சரவணன் தொடக்கவுரையையும் ஆற்றவுள்ளனர்.

இவ்வாண்டும் கம்பன் விழாவில், இராமாயணத்துள் நரசிம்ம அவதாரத்தைக் கம்பன் சித்தரித்துள்ள திறத்தை வியக்கும் கட்டுரைகளின் தொகுப்பான 'காவியத்துள் காவியம்' என்ற நூலும், கம்பவாரிதி இ. ஜெயராஜ் எழுதிய அகில இலங்கைக் கம்பன் கழக யாழ் வரலாற்றுத் தொகுப்பான ‘உன்னைச் சரணடைந்தேன்’ என்ற நூலும், கடந்த 2015ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணக் கம்பன் விழா நிகழ்ச்சிகளின் இறுவட்டுகளும் வெளியிடப்படவுள்ளன.

இவற்றின் முதற் பிரதிகளை இலக்கியப்புரவலர் ஹாசிம் உமர் , ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் , அறங்காவலர் எஸ்.சுப்பிரமணியம் செட்டியார், அறங்காவலர் பி.சுந்தரலிங்கம் ஆகியோரும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

வழமை போல் இவ்வருடமும் கம்பன் கழகத்தினால் சமுதாயப் பணிக்காக வழங்கப் பெறும் அமரர் ஏ. எல். அலமேலு ஆச்சி நினைவு நிதியினை மட்டக்களப்பு யோகர் சுவாமி மகளிர் இல்ல அமைப்பினரும், அமரர் சி.கே. இலங்கைராஜா ஞாபகார்த்த சமூக உதவி அறக்கட்டளை நிதியை முள்ளியவளை திருமதி சாந்திகாந்தன் குடும்பத்தினரும் பெற்றுக் கொள்கின்றனர்.

தொடரும் பரிசளிப்பு அரங்கில் அமரர் இ. நமசிவாய தேசிகர் நினைவுத் திருக்குறள் மனனப் போட்டி, அமரர் துரை. விஸ்வநாதன் நினைவுப் பேச்சுப் போட்டி மற்றும் அமரர் பொன். பாலசிங்கம் நினைவுக் கவிதைப் போட்டியில் வெற்றியீட்டியோருக்கான தங்க, வெள்ளி வெண்கலப் பதக்கப் பரிசில்கள் வழங்கப்படும்.

கம்பன் விழாவில் வருடாந்தம் வழங்கவென அறக்கட்டளை விருதுகளைச் சிலர் ஏற்படுத்தியுள்ளனர். நாவலர் நற்பணி மன்றத்தின் தலைவர் என். கருணைஆனந்தன் சிறந்த அறிஞர் ஒருவருக்கு வழங்கவென நிறுவியுள்ள ‘நாவலர் விருது’ இவ்வாண்டு யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அறிஞர் கலாநிதி பண்டிதர் செ. திருநாவுக்கரசு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவரின் தொடர்ச்சியான தமிழ்மொழிப் பணியைப் பாராட்டும் முகமாக இவ்விருதும் பொற்கிழியும் அவருக்கு வழங்கப்படவுள்ளன.

தமிழ்நாடு திருக்குவளை இராமஸ்ரீனிவாசன் மங்கையர்க்கரசி நினைவு அறக்கட்டளையினர், சிறந்த இசைக்கலைஞர் ஒருவருக்கு வழங்கவென நிறுவியுள்ள ‘விபுலாநந்தர் விருது’ இவ்வாண்டு புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான் அளவெட்டி எம்.பி.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஈழத்தின் மிக மூத்த இவ் இசைக்கலைஞரின் இசையாற்றலைப் பாராட்டி விபுலாநந்தர் விருதும், பொற்கிழியும் வழங்கப்படவுள்ளன.

கழகத்தின் கம்பன் புகழ் விருது பெற்ற கவிஞர் ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் அவர்கள், ஈழத்துக் கவிஞர்களை கெளரவிப்பதற்காக நிறுவிய ‘மகரந்தச் சிறகு’ விருது இவ்வாண்டு இலங்கையின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான கவிஞர் மு. சடாட்சரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களின் நினைவாக அவரின் குடும்பத்தினர் நிறுவியுள்ள அறக்கட்டளை மூலம், சிறந்த ஆய்வு நூல் ஒன்றுக்கு ‘நுழைபுலம் ஆய்வு’ விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இவ்வாண்டுக்குரிய சிறந்த ஆய்வு நூலாக கலாநிதி சா.தில்லைநாதன் எழுதிய 'மட்டக்களப்புத் தமிழர் பண்பாட்டு மரபுகள்' எனும் நூல் தெரிவு செய்யப்பட்டு, நுழைபுலம் விருதும், பொற்கிழியும் வழங்கப்படவுள்ளன.

தமிழகப் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் நிறுவியுள்ள ‘ஏற்றமிகு இளைஞர்’ விருதினை, சிறந்த இளம் அறிப்பாளர் எஸ்.எம்.எம். முஷர்ரப் பெற்றுக் கொள்ளவுள்ளார். இவ்விருதாளருக்கு பொற்கிழியும் வழங்கப்படுகின்றது.

இன்றைய நிறைவு நிகழ்வாக 'நாட்டியார்ப்பணம்' எனும் நடன நிகழ்ச்சி ‘அக்கிப் பிரவேசம்’ எனும் தலைப்பில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியினை வழங்குவதற்காக தமிழ்நாட்டிலிருந்து புகழ் பெற்ற நாட்டியக்கலைஞர் ஸ்ரீமதி மீனாட்சி ஸ்ரீநிவாசன் அவர்கள் தமது அணிசெய் கலைஞர்களுடன் வருகை தந்துள்ளார்.

கம்பன் விழாவினையொட்டி விழா மண்டபத்தில் பூபாலசிங்கம் புத்தகசாலையினரால் புத்தகக் கண்காட்சியும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில் கலந்து கொள்ளவென தமிழகத்திலிருந்து ஐந்து பேச்சாளர்களும், மலேசியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தமிழகத்திலிருந்தும் நம்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான பேராளர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளாக பட்டிமண்டபம், கவியரங்கம், வழக்காடு மன்றம், கருத்தரங்கம், சிந்தனை அரங்கம், மேன்முறையீட்டுப் பட்டிமண்டம், நூற்றாண்டு நிறைவரங்கு தனியுரை மற்றும் படைத்தவனைச் சந்திக்கும் பாத்திரங்கள் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

கம்பன் விழாவில் கலந்து தமிழ்ச் சுவை பருக அனைவரையும் வருகை தரும்படி கம்பன் கழகத்தினர் வேண்டியுள்ளனர்.

கே. பொன்னுத்துரை
கொழும்பு கிழக்கு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...