உமா ஓயா பல் அபிவிருத்தி திட்டம் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவின் சின்னம் மட்டுமல்லாது, ஆசிய வலய நாடுகளுக்கு இடையேயான அதிகபட்ச ஒத்துழைப்பு, ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கான அடையாளமாகுமென ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி தெரிவித்தார்.
இலங்கையுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் செல்ல தயாரென உறுதியளித்த ஈரான் ஜனாதிபதி, இலங்கையின் பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கையின் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் உதவத் தயாரெனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பங்கேற்குமாறு தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒருங்கிணைப்பின் அடையாளமாக விளங்கும் இந்நிகழ்வில் பங்கேற்பதை பெருமையாகவும் கருதுவதாகவும் அவர் கூறினார்.
இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, “இந்த திட்டம் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவின் சின்னம் என்றே கூறவேண்டும். இந்த அற்புதமான பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கிறோம்.
ஆனால், இரு நாடுகளுக்கும் ஆசிய பிராந்திய நாடுகளுக்கும் இடையே அதிகபட்ச ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை என்பவற்றை உறுதிசெய்வதே இங்கு மிக முக்கியமான விடயம் என்று நான் நம்புகிறேன்.