யாழ்ப்பாணத்தில் மறைந்த தனது தந்தையை நினைவுகூர்ந்து அவரது மகன் மிகவும் பிரமாண்டமான முறையில் நினைவாலயமொன்றை கட்டியுள்ளார்.
யாழ். வட்டுக்கோட்டை, சுழிபுரம் கிழக்கு பிரதேசத்திலேயே இந்த நினைவாலயம் கட்டப்பட்டுள்ளதுடன், அதற்கு ‘கந்தக் கோட்டம்’ எனவும் பெயர் சூட்டியுள்ளார்.
தனது தந்தை கந்தசாமி என்பவரை நினைவுகூர்ந்து பகீரதன் என்ற அவரது மகனே இந்த நினைவாலயத்தை கட்டியுள்ளார்.
கடந்த 2011.04.01 அன்று தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து அடுத்த வாரமே நினைவாலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு, ஒரு வருடத்தில் பெரும்பாலான வேலைகள் செய்து முடிக்கப்பட்டாலும், பணப் பிரச்சினையால் நினைவாலய கட்டட நிர்மாண வேலைகளை பூர்த்தி செய்ய முடியாமலிருந்ததால், இதன் எஞ்சிய வேலைகள் தற்போது இடம்பெறுகின்றன.
இதற்கான கட்டடக் கலை வேலைகள் இந்தியக் கலைஞர்களால் மேற்கொள்ளப்பட்டது போன்று தோற்றமளித்தாலும், முற்றுமுழுதாக யாழ். தொல்புரம் பிரதேசத்தில் வசிக்கும் தொழிலாளர்களின் கைவண்ணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாஜ்மஹால், ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் ஆலயங்களின் கட்டடக் கலைகளை பின்பற்றி இந்த நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நினைவாலயத்துக்கருகில் வசிக்கும் மாணவர்களுக்கு 40% இலவசக் கல்வி கடந்த பல வருடங்களாக வழங்கப்பட்டு வந்தது. அண்மைக்காலமாக பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே வன்முறைகள், முரண்பாடுகள் இடம்பெற்று வரும் இன்றைய சூழலில் தந்தைக்காக மகன் கட்டிய இந்த நினைவாலயம், அடுத்த கட்ட சந்ததியை நல்வழிப்படுத்த முன்னூதாரணமாக உள்ள தென்றும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.