டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இரத்தசீனி அளவு 360 ஆக அதிகரித்தது. இதையடுத்து அவருக்கு சிறையில் வைத்தே இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்த வழக்கில் டெல்லி முதல்வரான கெஜ்ரிவால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் போதிலும் அவர் தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்யவில்லை.
தொடர்ந்து டெல்லி முதல்வராக இருந்து சிறையில் இருந்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளியான கெஜ்ரிவால், சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக அவருக்கு இன்சுலின் ஊசி, வீட்டில் சமைத்த உணவு போன்றவற்றை வழங்க சிறை நிர்வாகம் மறுத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கெஜ்ரிவாலை சிறையில் கொலை செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் இதை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும் தனக்கு இன்சுலின் போட்டுக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்து சிறை நிர்வாகம் அனுமதி மறுப்பதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு இரத்தகுளுக்ேகாஸ் அளவு 350 இற்கு மேல் சென்றது. இதனால், சிறைக்குச் சென்ற பின் முதல் முறையாக இன்சுலின் செலுத்தப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு கெஜ்ரிவாலின் சீனி அளவை கட்டுபடுத்தும் வகையில் இன்சுலின் ஊசி போடப்பட்டது.