இந்திய மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தோல்வி உறுதி என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அ.தி.மு.கவை கைப்பற்ற சசிகலா அதிரடி திட்டம் வகுத்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வந்ததில் இருந்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சசிகலா ஒதுங்கி உள்ளார். அ.தி.மு.கவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அது நடக்கவில்லை.
டிடிவி.தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனி அணியாக செயல்படுகின்றனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்த இருவரும் பா.ஜ.க அணியில் இணைந்து போட்டியிட்டனர். அ.தி.மு.க, தே.மு.தி.கவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மக்களவை தேர்தலில் வாக்களித்த பின், பேட்டியளித்த சசிகலா, வாக்கு எண்ணிக்கைக்கு பின் தவறு செய்தவர் திருந்துவார் என்று எடப்பாடியை மறைமுகமாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதும், பொதுச்செயலாளராக ஆன பின்பும் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க தோல்வியடைந்து விட்டது. இப்போது மக்களவை தேர்தலிலும் தோற்றால், தொண்டர்கள் கடும் விரக்தியடைவார்கள். எடப்பாடி மீது கோபம் ஏற்படும். இதை பயன்படுத்தி அ.தி.மு.கவை கைப்பற்றலாம் என சசிகலா திட்டமிட்டுள்ளாராம். இதற்காக இப்போதே தனது ஆதரவாளர்கள், தொண்டர்களை திரட்டும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.