நடப்பு IPL 2024 சீசனின் 39ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இதில் 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் அபாரமாக பேட் செய்து தனது அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்தப் போட்டி சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாணயச்சசுழந்சியில் வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 210 ஓட்டங்கள் எடுத்தது. கேப்டன் ருதுராஜ் 60 பந்துகளில் 108 ஓட்டங்கள் எடுத்தார். ஷிவம் துபே, 27 பந்துகளில் 66 ஓட்டங்கள் விளாசினார்.
211 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விரட்டியது. அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் டிகாக் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் ஓவரில் டிகாக்கை வெளியேற்றினார் தீபக் சாஹர். 5ஆவது ஓவரில் கே.எல்.ராகுலை வீழ்த்தினார் முஸ்தபிசுர் ரஹ்மான்.
அதன் பின்னர் ஸ்டாய்னிஸ் மற்றும் தேவ்தத் படிக்கல் இணைந்து 55 ஓட்டங்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். படிக்கல் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் உடன் இணைந்து 70 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். பூரன் 15 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
பின்னர் தீபக் ஹூடாவுடன் இணைந்து 55 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஸ்டாய்னிஸ். 56 பந்துகளில் அவர் சதம் கண்டார். அவரது அபார இன்னிங்ஸின் பலனாக 19.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 213 ஓட்டங்கள் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். அதன் மூலம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஸ்டாய்னிஸ் 124 ஓட்டங்கள் மற்றும் ஹூடா 17 ஓட்டங்கள் உடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
புள்ளிகள் பட்டியலில் 4ஆவது இடத்துக்கு அந்த அணி முன்னேறியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது இடத்தில் உள்ளது.